யதார்த்த வாழ்க்கையை படமாக்கினேன்: டூலெட் இயக்குனர்

வாடகை வீடு தேடி அலையும் யதார்த்த வாழ்க்கையை படமாக்கினேன்: டூ லெட் இயக்குனர் செழியன்

by Bella Dalima 14-04-2018 | 8:55 PM
வாடகை வீடு தேடி அலையும் யதார்த்த வாழ்க்கையைப் படமாக்கியிருப்பதாக சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது வென்றுள்ள ‘டூ லெட்’ (To Let) படத்தை இயக்கிய செழியன் தெரிவித்துள்ளார். 65 ஆவது தேசிய விருது பட்டியல் நேற்று (13) அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை ‘டூ லெட்’ என்ற படம் பெற்றுள்ளது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் 30 சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறது. திரைக்கு வருவதற்கு முன்பே பல்வேறு நாடுகளில் பாராட்டுப்பெற்ற இந்த படம் உருவானது எப்படி, ‘டூ லெட்’ படத்தின் கதை என்ன என்பது குறித்து இதன் இயக்குனர் செழியன் விளக்கமளித்துள்ளார்.
நமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது பெரிய வி‌ஷயம். இதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘டூ லெட்’ படத்தின் கதை. நமது குடும்பத்தில் எத்தனையோ வி‌ஷயங்கள் நடக்கின்றன. இதை மற்ற நாட்டினரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதை உள்ளபடியே திரைப்படமாக்கி இருக்கிறேன். வெளிநாட்டுப் படங்களை நாம் ஆச்சரியமாகப் பார்க்கிறோம். நமது நாட்டில் நடக்கும் வி‌ஷயங்களை அவர்கள் அதிசயமாகப் பார்க்கிறார்கள் என்பதற்கு ‘டூ லெட்’ படம் உதாரணம். இது 30 நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் பாராட்டைப் பெற்றது. 17 விருதுகளையும் பெற்றிருக்கிறது. இந்த படத்தின் நாயகன் சந்தோஷ், நாயகி ஷீலா, குழந்தை நட்சத்திரம் தருண் ஆகியோர் தான் முக்கிய பாத்திரங்கள். ஒரு சாதாரண குடும்பம் வீட்டை மாற்றும் சூழ்நிலை ஏற்படுகிறது. வாடகை வீடு தேடும் அவர்கள் எப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கிறார்கள் என்பதை எப்படி சொல்ல விரும்பினேனோ அதற்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்திருக்கிறார்கள். சாதாரணமாக எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இப்போது தேசிய அங்கீகாரமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
என கூறியுள்ளார் இயக்குனர் செழியன்.