பெற்றோர் இறந்து 4 வருடங்களின் பின் பிறந்த குழந்தை

பெற்றோர் இறந்து 4 வருடங்களின் பின்னர் பிறந்த குழந்தை

by Bella Dalima 13-04-2018 | 6:07 PM
தம்பதியர் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வாடகைத்தாய் மூலம் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளமை சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சட்டவிரோத செயலாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தகுந்த வெளிநாடுகளைத் தேடிச்செல்லும் நிலை உள்ளது. இந்தச் சூழலில், குழந்தைப்பேறு இல்லாத சீனத் தம்பதியர், அதற்கான சிகிச்சையைப் பெற்று வந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு நேரிட்ட கார் விபத்தில் உயிரிழந்தனர். எனினும், அவர்களது உயிரணுக்கள் பெய்ஜிங் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வந்தன. அந்த தம்பதியரின் ஆசைக்கிணங்க அவர்களின் உயிரணுக்களைக் கொண்டு குழந்தையை உருவாக்க தம்பதியரின் பெற்றோர்கள் விரும்பினர். எனினும், வாடகைத்தாய் மூலம் அந்த குழைந்தையைப் பெறுவதற்காக, உயிரணுக்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்ல சீன சட்டம் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக இதற்காக நீதிமன்றத்தில் போராடிய தம்பதியரின் பெற்றோர்கள், தற்போது லாவோஸ் நகருக்கு அந்த உயிரணுக்களை எடுத்துச்சென்று, அங்கு அவற்றை கருவாக்கியுள்ளனர். மேலும், அந்தக்கரு, வாடகைத்தாய் மூலம் அழகிய ஆண் குழந்தையாகப் பிறந்துள்ளது. இறந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகும், தம்பதியருக்குப் பிறந்த அந்தக் குழந்தை குறித்த தகவல் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.