23 ஆம் திகதி அமைச்சரவையில் முழுமையான மாற்றம்

எதிர்வரும் 23 ஆம் திகதி அமைச்சரவையில் முழுமையான மாற்றங்கள் இடம்பெறும்: ஜனாதிபதி செயலாளர்

by Bella Dalima 13-04-2018 | 3:24 PM
Colombo (News 1st)  அமைச்சரவையில் முழுமையான மாற்றங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறும் என ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் (15) பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளார். இந்நிலையில், அமைச்சரவையில் தற்காலிகமாக 4 அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டனர். கலாநிதி சரத் அமுனுகம திறன் விருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இடர் முகாமைத்துவ அமைச்சராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார். பைசர் முஸ்தபா விளையாட்டுத்துறை அமைச்சராகவும் மலிக் சமரவிக்ரம சமூக நலன்புரி, மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த அமைச்சர்களுக்கு ஏற்கனவே தாம் வகிக்கும் அமைச்சுப்பதவிகளுக்கு மேலதிகமாகவே புதிய அமைச்சுப்பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.