ஆயுதக்கொள்கலன் புதைக்கப்பட்டுள்ளதாகக்கூறி அகழ்வு

கிளிநொச்சியில் ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன் புதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

by Bella Dalima 11-04-2018 | 9:57 PM
Colombo (News 1st)  கிளிநொச்சி - அறிவியல் நகர் பகுதியில் ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன் புதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இன்று அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றது. அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட வளாகத்தின் பின்புறம் இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இன்று பிற்பகல் இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரவு 8.30 மணி வரை இடம்பெற்றன. மீண்டும் நாளை காலை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெறுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.