பிரியா வாரியர் படத்திற்கு மீண்டும் சோதனை

பிரியா வாரியர் படத்திற்கு மீண்டும் சோதனை

by Staff Writer 09-04-2018 | 5:50 PM
COLOMBO (News 1st) கண் அசைவு மூலம் ரசிகர்களை கவர்ந்த பிரியா வாரியருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஒரு அடார் லவ்’ படத்துக்கு மீண்டும் சோதனை வந்திருக்கிறது மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” எனும் திரைப்படம் தயாராகி வருகிறது, கடந்த பெப்ரவரி மாதம் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகள் வெளியிடப்பட்டது. அதில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் கண்ணடிப்பு காட்சி சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் பரவியது. நடிகை பிரியா பிரகாஷ் புருவத்தை வில்லாக வளைத்து கண்ணடிப்பது போன்று வரும் காட்சி இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அந்த படத்தில் வரும், “மாணிக்கிய மலராய பூவி” என்ற பாடல் இஸ்லாமியர்கள் எதிர்ப்பால் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து இந்த பாடலை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நடிகை பிரியாவுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த 2 பேர் இந்த படப்பாடல் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் மனுவில், “ஒரு அடார் லவ்’ படத்தில் வரும் பாடல் முகம்மதுவையும் அவரது மனைவி கதீஜாவையும் இழிபடுத்துவது போல உள்ளது. இஸ்லாமியர்களின் உணர்வை பாதிக்கும் அந்த பாடலை உடனே படத்தில் இருந்து நீக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.