ஆசிரியரால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்...

முல்லைத்தீவில் ஆசிரியரால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதி

by Bella Dalima 07-04-2018 | 3:23 PM
Colombo (News 1st)  முல்லைத்தீவில் ஆசிரியரொருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவியொருவர் பாடசாலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். முல்லைத்தீவு - கறிப்பட்டமுறிப்பு பாடசாலையில் கல்வி கற்கும் 10 வயதான மாணவி, கடந்த வியாழக்கிழமை (05) பாடசாலைக்கு சமூகமளிக்காமல், வௌ்ளிக்கிழமை (06) பாடசாலைக்கு சென்றுள்ளார். முன்தினம் பாடசாலைக்கு வருகை தராததன் காரணமாக ஆசிரியர், மாணவியை தாக்கியதாக மாணவியின் பெற்றோர் குறிப்பிட்டனர். மாணவியின் கைகள், கால்களில் தழும்புகள் காணப்படுவதாக மாணவியின் தாய் தெரிவித்தார். காயமடைந்த சிறுமியை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.