சிறுமி துஷ்பிரயோகம்: ஆசிரியருக்கு கடூழிய சிறை

வவுனியாவில் சிறுமி துஷ்பிரயோகம்: ஆசிரியருக்கு 20 வருட கடூழிய சிறை

by Bella Dalima 05-04-2018 | 5:16 PM
  வவுனியா - நெடுங்கேணியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 39 வயதான ஆசிரியருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்காக கணிதப் பாட வினாத்தாள்களைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த ஆசிரியரின் வீட்டிற்கு சென்ற மாணவியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தார். ஆசிரியருக்கு எதிராக கடந்த வருடம் ஜூலை மாதம் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் நடைபெற்று, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆசிரியருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்தத் தவறினால் 6 மாத கால சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடாக 5 இலட்சம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அதனை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.