by Bella Dalima 05-04-2018 | 4:57 PM
சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை - அண்ணாசாலையில் பகுதி பகுதியாகப் பிரிந்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மறியலில் ஈடுபட்டு வருகின்றன.
பஸ்களை மறித்தும் சாலைகளில் அமர்ந்தும் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அண்ணாசாலையில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அங்கிருந்து மெரினா கடற்கரை நோக்கி ஸ்டாலின் தலைமையில் பேரணி நடந்தது.
தொடர்ந்து கடற்கரைக்கு சென்றவர்கள் அங்கும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பொலிஸார் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலரைக் கைது செய்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகமெங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 51 இடங்களில் நடத்தப்பட்ட ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்களில் சுமார் 6000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.