மேன்முறையீடு செய்யப்போவதில்லை: ஸ்டீவன் ஸ்மித்

போட்டித்தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதில்லை: ஸ்டீவன் ஸ்மித்

by Bella Dalima 04-04-2018 | 4:31 PM
அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்தினால் விதிக்கப்பட்டுள்ள ஒரு வருட போட்டித்தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதில்லை என முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் கெமரூன் பேன்க்ராப்ஃட் பந்தை சேதப்படுத்த, ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் உடந்தையாக இருந்தமை கண்டறியப்பட்டது. இதனால் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஒரு வருட போட்டித்தடையும் கெமரூன் பேன்க்ராப்ஃட்டிற்கு 09 மாத போட்டித்தடையும் விதிக்கப்பட்டது. இந்தத் தடையை எதிர்த்து ஒரு வாரத்திற்குள் குறித்த மூவரும் மேன்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய நிலையில் ஒரு வருட போட்டித்தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதில்லை என ஸ்டீவன் ஸ்மித் அறிவித்துள்ளார்.