பிரதமருக்கு எதிரான பேரணி கொழும்பில் நிறைவு

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவான பேரணி கொழும்பில் நிறைவு

by Bella Dalima 04-04-2018 | 9:18 PM
Colombo (News 1st)  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி கொழும்பில் இன்று நிறைவு பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்பன இணைந்து ஏற்பாடு செய்த இந்த பேரணியின் இன்றைய பயணம் கிரிபத்கொடயில் இன்று ஆரம்பமானது. சர்வாதிகார நண்பர்களைத் தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ஒருகொடவத்த சந்திக்கு வருகை தந்தவர்கள் பேஸ்லைன் வீதியூடாக பொரளைக்கு சென்று பேரணியை நிறைவு செய்தனர். இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காலியில் நேற்று (03) ஆரம்பமான பேரணி அளுத்கம ஊடாக பாணந்துறை நகரை இன்று வந்தடைந்தது. தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. நாட்டை ஸ்திரமற்றதாக மாற்றும் அரசியல் சூழ்ச்சிகளைத் தோற்கடிக்கும் மக்கள் போராட்டம் என்ற தொனிப்பொருளில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.