கௌதம் மேனன் மீது மீண்டும் முறைப்பாடு

கௌதம் மேனன் மீது மீண்டும் முறைப்பாடு

by Staff Writer 03-04-2018 | 9:34 AM
COLOMBO (News 1st) - நரகாசுரன்’ படம் விவகாரத்தில் கௌதம் மேனன், கார்த்திக் நரேன் மோதலையடுத்து கௌதம் மேனன் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், கௌதம் மேனன் மீது கார்த்திக் நரேன் மீண்டும் முறைப்பாடு தெரிவித்துள்ளார். அரவிந்தசாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நரகாசுரன், இந்த படத்தை தயாரித்த கௌதம் மேனன், இயக்குநர் கார்த்திக் நரேன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. படக்குழுவினரை கௌதம் மேனன் குப்பைபோல் நடத்தியதாகவும் நரகாசுரன் படத்துக்கு வாங்கிய தொகையை வேறு படங்களுக்கு செலவிட்டு, பட வேலைகளை முடக்கியதாகவும் கார்த்திக் நரேன் குற்றம் சாட்டினார். இதனை கௌதம் மேனன் மறுத்துள்ளார், படத்தில் இருந்து வெளியேற தயாராக இருக்கிறேன். சிலர் பேச்சை கேட்டு கார்த்திக் நரேனுக்கு கோபம் வந்துள்ளது என்று அவர் கூறினார். இதைத்தொடர்ந்து கௌதம் மேனன் மீது கார்த்திக் நரேன் மீண்டும் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:- “கௌதம் மேனன் சினிமா துறையில் மூத்தவர். அவர் தயாரிக்கும் துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களின் பட்ஜெட் நரகாசுரனை விட பல மடங்கு அதிகம் என்பது உண்மைதான். நரகாசுரன் படத்திற்கு பணம் வாங்கி அதை துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களுக்கு முதலீடு செய்யவில்லை என்று கௌதம் மேனன் கூறியிருப்பதில் உண்மை இல்லை. என்னிடம் ஆதாரம் இருக்கிறது. எனது படத்தை காட்டி அவர் யாரிடம் பணம் வாங்கினார் என்பது எனக்கு தெரியும். கௌதம் மேனனுக்கு பணம் கொடுத்தவர் நீதிமன்றத்தில் நரகாசுரன் படத்துக்கு எதிராக தடை வாங்கி விட்டார். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மற்றவர்களை அவர் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு கார்த்திக் நரேன் கூறியுள்ளார்