மேற்கிந்தியத் தீவுகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம்: மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது

by Bella Dalima 31-03-2018 | 5:28 PM
பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு பல வருடங்களாக பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை. எனினும், கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டிருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நாளை (01) ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி கராச்சியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னணி வீரர்களான ஜேசன் ஹோல்டர், கிறிஸ் கெய்ல், கார்லஸ் பிரத்வைட், சுழற்பந்து வீச்சாளர் தேவேந்த்ர பிஷூ ஆகியோர் குழாத்தில் இடம்பெறவில்லை. அணித்தலைவராக ஜேசன் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் சாமுவேல் பத்ரி, ரயட் எம்ரிட், ஆண்ட்ரே ஃப்ளெட்சர், ஆண்ட்ரே மெக்கர்த்தி, கீமோ பால், வீரசாமி பெருமாள், ரோவ்மன் பவல், டெனிஷ் ரம்டின், மர்லோன் சாமுவேல், ஒடியன் ஸ்மித், சட்விக் வால்ட்டன், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.