2ஆவது சர்வதேச T20: இலங்கை மகளிர் அணி வெற்றி

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20: இலங்கை வெற்றி

by Bella Dalima 30-03-2018 | 4:44 PM
Colombo (News1 st)  பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்களால் வெற்றிகொண்டது. இதற்கமைய, 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன. கொழும்பு NCC மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. 7 வீராங்கனைகள் 10 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அணித்தலைவி பிஸ்மா மஹ்ருப் அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றார். பாகிஸ்தான் மகளிர் அணி 18. 4 ஓவர்களில் 72 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. பந்து வீச்சில் சஷிகலா சிறிவர்தன 3.4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். வெற்றி இலக்கான 73 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை மகளிர் அணி சார்பாக அனுஸ்கா சஞ்சீவனி 20 ஓட்டங்களையும் , ரெபேகா வென்டோட் 19 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதி செய்தனர். இலங்கை மகளிர் அணி 14.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கைக் கடந்தது.