வில்லனாக நடிக்க மறுத்த மாதவன்

வில்லனாக நடிக்க மறுத்த மாதவன்

by Staff Writer 27-03-2018 | 11:12 AM
COLOMBO (News 1st) - தமிழ் மற்றும் இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன், பிரபல இயக்குனர் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். ‘இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு மாதவனுக்கு தமிழ், இந்தி மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவரது நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது இந்தி படம் ஒன்றில் வில்லனாக நடிக்க மறுத்திருக்கிறார். தற்போது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் இந்தியில் தயாராகும் படம் ’சிம்பா’. தெலுங்கில் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டெம்பர்’ படத்தின் இந்தி ரீமேக்காக இப்படம் உருவாகிறது. ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க இருக்கும் இந்தப் படத்தில், சரா அலிகான் ஹீரோயினாக நடிக்கிறார். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ‘தன்னை வில்லனாக நடிக்குமாறு கேட்டது உண்மைதான். ரோஹித் ஷெட்டி மற்றும் அவருடைய படங்களின் மிகப் பெரிய ரசிகன் நான். என்னுடைய தோள்பட்டை காயத்தால் இந்தப் படத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறேன்” என ட்விட்டரில் மாதவன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மாதவனுக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.