by Staff Writer 25-03-2018 | 6:04 PM
COLOMBO (News 1st) - ‘சீமராஜா’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் முக்கிய பிரபலங்கள் இருவர் படக்குழுவில் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயன் அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை நிரவ் ஷாவும், கலை பணிகளை முத்துராஜும் மேற்கொள்ள இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதில் கலை இயக்குநர் முத்துராஜ் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான வேலைக்காரன் படத்தில் கலை பணிகளை கவனித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் படத்தில் ‘டைம் மிஷின்’ சம்பந்தப்பட்ட படத்தை இயக்கிய ரவிக்குமார், தற்போது விஞ்ஞானி தொடர்பான கதையை இயக்குகிறார்.
வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானி கதை. எனவே, இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் விஞ்ஞானி கெட்அப்பிற்கு மாறவுள்ளார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன், ரவிக்குமார் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.