உலகக் கிண்ணத்தில் விளையாடும்  மேற்கிந்தியத்தீவுகள்

2019 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது ​மேற்கிந்தியத் தீவுகள் அணி

by Staff Writer 22-03-2018 | 12:04 PM
COLOMBO (News 1st) - 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் விளையடுவதற்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதிபெற்றுள்ளது. உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் சிறந்த 6 அணிகளின் சுற்றில் தாம் பங்குபற்றிய 5 போட்டிகளில் நான்கில் வெற்றிபெற்றதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த வாய்ப்பைப் பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடிய ஐந்தாவது ஒருநாள் போட்டி ஸ்கொட்லாந்திற்கு எதிராக ஹராரேயில் நடைபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாய் இருந்தது. அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷாய் ஓவ்பும் ஓட்டமின்றி ஆட்டமிழக்க மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. என்றாலும், ஏவின் லூவிஸ் 66 ஓட்டங்களையும், மாலன் சமுவேல்ஸ் 51 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். கிரெக் பிரத்வைட் 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 48.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் பிரும் வீல், சப்யான் ஷரீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 199 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய ஸ்கொட்லாந்து அணி 35.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. ரிச்சி பெரின்டன் 33 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். கெமர் ரொச், அஷ்லி நர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டத்தை தொடர முடியாது போக டக்வேர்த் லூவிஸ் விதிமுறையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றதாக கணிக்கப்பட்டது. இது தகுதிகாண் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற நான்காவது வெற்றி என்பதுடன் இதன் மூலம் அடுத்த வருட உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதிபெற்றது.