குருக்கள் சுட்டுக் கொலை:குற்றவாளிகளுக்கு மரணதண்டனை

சங்கானையில் குருக்கள் சுட்டுக் கொலை: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

by Staff Writer 22-03-2018 | 12:58 PM
COLOMBO (News 1st) - யாழ். சங்கானை பகுதியில் குருக்கள் ஒருவரை சுட்டுக் கொலை செய்த மூன்று குற்றவாளிகளுக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்த யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சந்தேகநபர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் முறியடிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். 2010 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி யாழ். சங்கானை முருகமூர்த்தி ஆலய குருக்களின் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்கள் குறித்த மூவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டிருந்தது. குருக்களின் வீட்டுக்குள் அத்துமிறி நுழைந்தமை, தன்னியக்க ரி 56 ரக துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டமை, குருக்களை சுட்டுக் கொலை செய்தமை குருக்களின் புதல்வர்களான இந்துமத குருமாரை காயப்படுத்தியமை, மரண மடைந்த குருக்களின் இரண்டாவது மகனை துப்பாக்கியால் சுட்டு கடுமையாக காயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் அரச தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சிகளை எதிரிதரப்பு முறியடிக்க தவறியதாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டினார். இதற்கமைய வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட மூவருக்கும் நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.