ஆவணங்களை பொதுஜன பெரமுன சமர்ப்பிக்கவில்லை

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தலைவர்களை நியமிக்க தேவையான ஆவணங்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பிக்கவில்லை

by Staff Writer 21-03-2018 | 7:09 AM
COLOMBO (News 1st) - உள்ளூராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள் மற்றும் பிரதித் தலைவர்களை நியமிக்க தேவையான ஆவணங்கள் எதனையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரை சமர்ப்பிக்கவில்லையென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 170 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தலைவர்களை தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளினால் நேரடியாக தெரிவுசெய்ய முடியும் என ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன்சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கிணங்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 156 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நேரடியாக தெரிவு செய்ய முடியும். இதனிடையே ஐக்கிய தேசிய கட்சி மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்ற 14 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தலைவர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கட்சிகள் அறிவித்துள்ளன. குறித்த உள்ளூராட்சி மன்றங்களில் அரசியல் கட்சிகளோ அல்லது சுயாதீன கட்சிகளோ 50 வீதம் அல்லது அதற்கு அதிக வாக்குகளை பெறாத பட்சத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் தீர்மானத்திற்கமைய தலைவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன்சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.