இலங்கை குழு ஜெனீவாவை சென்றடைந்தது

மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கும் குழு ஜெனீவாவை சென்றடைந்தது

by Staff Writer 20-03-2018 | 6:54 AM
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்றும் இலங்கை குழு ஜெனீவாவை சென்றடைந்துள்ளது. அமைச்சர்களான சரத் அமுனுகம,பைஸர் முஸ்தபா, வௌிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் ஜெனீவாவிற்கு சென்றுள்ளனர். இதேவேளை எதிர்வரும் 21 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஸெய்ட் ராட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பிலான அறிக்கையை சமர்பித்து உரையாற்றவுள்ளார். பொறுப்புக் கூறல் செயற்பாட்டை முன்னெடுப்பதில் இலங்கை தாமதம் காட்டுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் தெரிவித்திருந்தார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்திருந்த அறிக்கையிலே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. கடந்த மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் மார்ச் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பொறுப்புக் கூறல் தொடர்பில் 30/1 பிரேரணையை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு இரண்டு வருட கால அவசாகம் வழங்கி, ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையிலே ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.