by Bella Dalima 17-03-2018 | 6:06 PM
சிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் சுமார் 50,000 பேர் வௌியேறியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
வடக்கு மற்றும் தெற்கு சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான உச்சகட்ட தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
சிரியாவில் 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் இணைந்து செயற்படுகிறது.
இதுவரை அங்கு 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு சிரியாவில் உள்ள ஆப்ரின் நகரத்தில் துருக்கி படைகளும் அதன் கூட்டாளிகளும் முற்றுகையை விலக்கியதை அடுத்து, அங்கிருந்து நேற்று (16) சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.
கிழக்கு கூட்டா பகுதிகளில், சிரிய அரசு படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்.
இதனால் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் தொலைத்துவிட்டு, உயிருக்குப் பயந்து வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போரினால் இதுவரை 1.2 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளார்கள். சுமார் 61 இலட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 56 இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.