பங்களாதேஷ் இறுதிப்போட்டிக்கு தகுதி

இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் இறுதிப்போட்டிக்கு தகுதி

by Bella Dalima 17-03-2018 | 3:34 PM
Colombo (News 1st)  சுதந்திரக் கிண்ண முக்கோண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மஹமதுல்லாவின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 160 ஓட்டங்கள் இலக்கை பங்களாதேஷ் அணி ஒரு பந்து எஞ்சிய நிலையில் எட்டியது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அணி ஆரம்பத்தில் கடும் பின்டைவுக்குள்ளானது. ஓட்டங்களைக் குவிக்கக்கூடிய பவர் பிளேயில் 32 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டன. எனினும், அபாரமாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா மற்றும் அணித்தலைவர் திசர பெரேரா ஜோடி 61 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டது. குசல் ஜனித் பெரேரா 40 பந்துகளில் 61 ஓட்டங்களையும், திசர பெரேரா 37 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 58 ஓட்டங்களையும் விளாசினர். 160 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தமீம் இக்பால் அரைச்சதமடித்து அணியை வலுப்படுத்தினார். இதனிடையே மைதானத்தில் பங்களாதேஷ் வீரர்கள் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போட்டி சில நிமிடங்களுக்கு தடைப்பட்டது. எவ்வாறாயினும், கடைசி 2 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது அதிரடி சிக்ஸரடித்த மஹமதுல்லா பங்களாதேஷ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். 18 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 48 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் விளாசினார். பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.