நடிகை ஸ்ரீவித்யாவின் வீடு ஏலம் விடப்படுகிறது

வருமான வரி பாக்கிக்காக நடிகை ஸ்ரீவித்யாவின் வீடு ஏலம் விடப்படுகிறது

by Bella Dalima 16-03-2018 | 6:57 PM
தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீவித்யாவின் சென்னை வீடு ஏலம் விடப்படுவதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரபல நடிகையான ஸ்ரீவித்யா கடந்த 2006 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். 1966 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 34 ஆண்டுகள் இந்தியத் திரை உலகில் பிரபலமாக நடித்தார். ஸ்ரீவித்யாவின் கடைசிக்காலத்தில் அவரை கேரள நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கணேஷ்குமார் கவனித்து வந்தார். அவரது பாதுகாப்பில் ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் உள்ளன. ஸ்ரீவித்யாவுக்கு சென்னை அபிராமபுரம் - சுப்பிரமணியபுரம் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளது. தற்போது இதில் நடன பயிற்சி மையம் செயற்பட்டு வருகிறது. இதன் வாடகைத் தொகையை ஸ்ரீவித்யாவின் வருமான வரி பாக்கிக்காக வருமான வரித்துறை வசூலித்து வருகிறது. இந்த நிலையில், ஸ்ரீவித்யாவின் வருமான வரி பாக்கித் தொகைக்காக அபிராமபுரம் வீட்டை ஏலத்தில் விட வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. 1250 சதுர அடி கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஏலம் வருகிற 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதன் உத்தேச மதிப்பு 1 கோடியே 17 இலட்சத்து 10 ஆயிரம் இந்திய ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.