எம்.கே. சிவாஜிலிங்கம் கைதாகி பிணையில் விடுதலை

எம்.கே. சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு

by Bella Dalima 15-03-2018 | 10:32 PM
வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 22 ஆம் திகதி வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி சுவீகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, எம்.கே. சிவாஜிலிங்கம் மீது அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மாதம் 26 ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸாரால் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். வட மாகாண சபை அமர்வு காரணமாக அவர் விசாரணைக்கு சமூகமளித்திருக்கவில்லை. இதேவேளை, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜெனிவா சென்றிருந்ததால், கடந்த 6ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையிலும் ஆஜராகியிருக்கவில்லை. அவர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகளால் முன் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி முன் பிணை வழங்கினார். இந்நிலையில், இன்று மாலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு பிணையாளிகளுடன் சென்ற சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.