ஜெர்மனியில் மீண்டும் ஆட்சியமைக்கிறார் மேர்க்கல்

171 நாள் காத்திருப்பிற்குப் பின்னர் ஜெர்மனியில் மீண்டும் ஆட்சியமைக்கிறார் ஏஞ்சலா மேர்க்கல்

by Bella Dalima 14-03-2018 | 6:59 PM
ஜெர்மனியில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளதால் நான்காவது முறையாக வேந்தராக ஏஞ்சலா மேர்க்கல் தெரிவாகியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் 2005 ஆம் ஆண்டு முதல் ஏஞ்சலா மேர்க்கல் வேந்தராகப் பதவி வகித்து வருகிறார். 3 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. இந்த நிலையில், அந்நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. இதில் ஏஞ்சலா மேர்க்கலின் பழமைவாதக் கட்சி மற்றும் ஹோர்ஸ்ட் சீஹோபரின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மேர்க்கலுக்கு அதிக ஆதரவு இருந்தாலும், 246 இடங்களையே அந்தக் கூட்டணி கைப்பற்றியது. மேலும், கடந்த முறை அந்தக் கூட்டணி பெற்ற வாக்குகள் 41.5 வீதத்தில் இருந்து 32.9 வீதமாக சரிந்தது. அதே நேரம், அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பான விவகாரத்தில் ஏஞ்சலா மேர்க்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பழமைவாதக் கூட்டணியில் இருந்து தேர்தலுக்கு முன்பே விலகிய எஸ்.பி.டி. கட்சி 153 இடங்களைக் கைப்பற்றியது. ஏ.எஃப்.டி. 94 இடங்களிலும், எஃப்.டி.எஃப். 80, டி லிங்கே 69, கிரீன் கட்சி 67 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியிலேயே முடிந்தது. இதனால், புதிய அரசு அமைக்க முடியாமல் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் சர்ச்சைகள் எழுந்த நிலையில், தேவைப்பட்டால் பதவியை இராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்கத் தயார் என வேந்தர் ஏஞ்சலா மேர்க்கல் அதிரடியாக அறிவித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் மேர்கெலுக்கு ஆதரவளிக்கத் தயார் என எஸ்.பி.டி கட்சி அறிவித்தது. இந்நிலையில், அந்நாட்டு பாராளுமன்ற கீழ் சபையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் சி.எஸ்.யூ - சி.டி.யூ, எஸ்.பி.டி உறுப்பினர்கள் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார். 355 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 364 உறுப்பினர்கள் ஆதரவு மேர்க்கலுக்கு கிடைத்தது. 171 நாள் காத்திருப்பிற்குப் பின்னர் ஆட்சியமைத்துள்ள மேர்க்கல் விரைவில் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் வேந்தராகப் பொறுப்பேற்றுக்கொள்வார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.