by Staff Writer 14-03-2018 | 9:06 AM
COLOMBO (News 1st) - சுதந்திரக்கிண்ண முக்கோண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பங்களாதேஷிற்கிடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பு ஆர்.பிரமதாஸ விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவது நெருக்கடியாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் தோல்வியடைந்ததே அதற்குக் காரணமாகும்.
சுதந்திரக்கிண்ண முக்கோண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் லீக் போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் நேற்று முன்தினம் பலப்பரீட்சை நடத்தின.
மழை காரணமாக ஒரு மணித்தியாலத்திற்கு மேல் தாமதமான போட்டி 19 ஓவர்களாக நடத்தப்பட்டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலளித்தாடிய இந்தியா 17.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை கடந்தது.
இதற்கமைய லீக் சுற்றில் 3 போட்டிகளில் விளையாடிய இந்தியா 2 வெற்றிகளுடன் முதலிடம் வகிக்கிறது.
இலங்கை, பங்களாதேஷ் அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்று 2 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையில் இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ளன.
என்றாலும், பங்களாதேஷ் 2 போட்டிகளிலும், இலங்கை மூன்று போட்டிகளிலும் விளையாடியுள்ளன.
இதன்படி இன்று நடைபெறும் பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் இறுதிப் போட்டிக்கு இலகுவாக தகுதிபெறும்.
அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
ஒருவேளை, இன்றைய போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்று வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கான வாய்பை பெறும்.