இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

சுதந்திரக்கிண்ணம்: இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

by Staff Writer 13-03-2018 | 6:37 AM
COLOMBO (News 1st) - சுதந்திரக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றது கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்ற போட்டி, மழை காரணமாக 01 மணித்தியாலம் வரை தடைப்பட்டது. இதன் பிரகாரம், போட்டி 19 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்களை பெற்றது. சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் தனது 4 ஆவது அரைச்சதத்தை எட்டிய குசல் மென்டிஸ் 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். உபுல் தரங்க 22 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இந்திய அணியின் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 153 ஓட்டங்களை வெ்றறியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்டுக்களும் 62 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. எனினும் மனிஷ் பாண்டே மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி வெற்றியலக்கை அடைந்தது. மனிஷ் பாண்டே 31 பந்துகளில் 42 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 39 ஓட்டங்களையும் குவித்தனர். தினேஷ் கார்த்திக்கின் 39 பந்துகளில் 5 பௌண்டரிகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.