சமூக ஊடகங்கள் விரைவில் வழமைக்குத் திரும்பும்

சமூக ஊடகங்கள் விரைவில் வழமைக்குத் திரும்பும்; நள்ளிரவு முதல் வைபர் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்

by Bella Dalima 13-03-2018 | 8:16 PM
Colombo (News 1st)  சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றது. இதன்போது, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்ததாவது,
வாருங்கள் தாக்குவோம், கொல்வோம் என ஃபேஸ்புக் ஊடாக கூறப்படுமாயின், எமக்கு அது தொடர்பில் காணப்படும் சட்டம் என்ன? அவ்வாறான ஃபேஸ்புக் கணக்குகளை நீக்குமாறு நாம் தொடர்ந்தும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கூறியபோது அது இடம்பெறாமையால் பாரிய பிரச்சினையை எதிர்நோக்க நேரிட்டது. சிங்கள மொழியை புரிந்துகொள்வதற்கான இயலுமை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இல்லை. அதனை அவர்களே தெரிவித்திருந்தனர். இவை குறித்து கடிதப் பரிமாற்றத்தின் ஊடாக நாம் பேசியுள்ளோம். எதிர்காலத்தில் இதுகுறித்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பே எமது பாரிய பொறுப்பென நாம் கருதுகின்றோம்.
என தெரிவித்தார். மேலும், வௌ்ளிக்கிழமையாகும் போது சமூக வலைத்தளங்களை வழமை நிலைக்குக் கொண்டு வர முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், VPN ஊடாக சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதும் அதனை தரவிறக்கம் செய்வதும் தவறான விடயம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, வைபர் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் நீக்கிக்கொள்ளப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.