இலங்கை அகதி மாணவரின் கை விரல்கள் துண்டிப்பு

இலங்கை அகதி மாணவரின் கை விரல்கள் துண்டிப்பு: தமிழக மாணவர்கள் இருவர் கைது

by Bella Dalima 10-03-2018 | 3:35 PM
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் இலங்கை அகதி மாணவர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை திருவாதவூரிலுள்ள அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மாணவர்களுக்கு இடையிலான மோதல் வலுப்பெற்றதை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இலங்கை அகதி மாணவரின் கை விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அர்ஜூன் எனும் குறித்த மாணவர், மேலதிக சிகிச்சைகளுக்காக மதுரை இராஜாஜி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.