அர்ஜூன், கசுனின் பிணை மனுக்கள் நிராகரிப்பு

அர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேனவின் பிணை மனுக்கள் நிராகரிப்பு

by Bella Dalima 09-03-2018 | 3:39 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஷ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜயரத்னவால் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த இரண்டு சந்தேகநபர்களினதும் பிணை மனுக்களை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீள்பரிசீலனை மனு தாக்கல் செய்யப்பட்டது. சந்தேகநபர்களின் பிணை மனுவை நிராகரித்து நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு சட்ட ரீதியானது என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். குறித்த பிணை மனுக்களின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு அறிவித்தல் பிறப்பிக்காது, மீள்பரிசீலனை மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இரகசிய தரவுகளைப் பயன்படுத்தி முறிகள் ஏலத்தின் போது இருவேறு சந்தர்ப்பங்களில் 9,147 கோடி ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் ஈட்டியமை தொடர்பில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.