112 ஆவது வடக்கின் பெருஞ்சமர் நாளை

112 ஆவது வடக்கின் பெருஞ்சமருக்கு யாழ். மத்திய மற்றும் சென்.ஜோன்ஸ் கல்லூரிகள் தயார் நிலையில்

by Bella Dalima 07-03-2018 | 9:58 PM
112 ஆவது வடக்கின் பெருஞ்சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு யாழ். மத்திய மற்றும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிகள் தயாராகியுள்ளன. பாடசாலைகள் மத்தியில் நடத்தப்படும் பழைமை வாய்ந்த கிரிக்கெட் போட்டிகளில் ஒன்று வடக்கின் பெருஞ்சமர். 112 ஆவது ஆண்டாக இவ்வருடம் நடைபெறும் இந்தப் போட்டி யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை (08) ஆரம்பமாகவுள்ளது. யாழ். மத்திய கல்லூரி அணியை எஸ்.தசோபன் வழிநடத்துகிறார். கடந்த மூன்று வருடங்கள் அடைந்த தோல்வியை ஈடு செய்யும் வகையில் இந்த வருடம் விளையாடப் போவதாக யாழ். மத்திய கல்லூரி அணி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சென். ஜோன்ஸ் அணியின் தலைவரான வி. ஜதூஷன் இந்தப் பருவ காலத்திற்கான பாடசாலை மட்டப் போட்டியில் சதமடித்த வீரராகத் திகழ்கிறார். தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் வெற்றியீட்டும் நம்பிக்கையுடன் சென். ஜோன்ஸ் அணி போட்டிக்குத் தயாராகியுள்ளது. இதுவரை நடைபெற்ற 111 போட்டிகளில் சென். ஜோன்ஸ் அணி 35 வெற்றிகளையும், யாழ். மத்திய கல்லூரி அணி 27 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 40 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளதுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களும் சென்.ஜோன்ஸ் அணி வெற்றிபெற்றது என்பதுடன் யாழ். மத்திய கல்லூரி அணி இறுதியாக 2015 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றிருந்தது.