சமூக வலைத்தளங்களை கண்காணிக்க நடவடிக்கை

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை கண்காணிக்க நடவடிக்கை

by Staff Writer 07-03-2018 | 2:23 PM
COLOMBO (News 1st) - சமூவலைத்தளங்களை கண்காணிப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார். சமூக வலைத்தளங்களினூடாக வதந்திகள் பரப்பப்படுவதன் காரணமாக அவற்றை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பது மந்த கதியில் இடம்பெறுவதுடன் பதிவேற்றப்படும் தரவுகளின் எண்ணிக்கை குறைவடையும் என ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து தரவுகளும் இதனூடாக கண்காணிப்படுவதாகவும் அவர் கூறினார். தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல்களை பதிவேற்றம் செய்யும் போது மிகவும் பொறுப்புடன் செயற்படுமாறும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.