MGR இன் ஆட்சியை உருவாக்கப்போவதாக ரஜினி சூளுரை

எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை உருவாக்கப்போவதாக ரஜினிகாந்த் சூளுரை

by Bella Dalima 06-03-2018 | 5:56 PM
தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை உருவாக்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் சூளுரைத்துள்ளார். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் 30 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட அவர், தம்மீதான அரசியல் விமர்சனங்களுக்கும் பதிலளித்துள்ளார். ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாவது,
ஜெயலலிதா இருக்கும் போது ஏன் வரவில்லை, பயமா என்று கேட்கிறார்கள். அவர் இருக்கும்போதே 96 இல் நான் அரசியல் பேசியவன். வெற்றிடம் இருப்பதாலா வந்தீர்கள் என கேட்கிறார்கள். ஆம், வெற்றிடம் இருக்கிறது. நல்ல தலைவனுக்கு வெற்றிடம் இருக்கிறது. தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது. சக்திவாய்ந்த இரண்டு தலைவர்கள் இருந்தார்கள். ஜெயலலிதா - ஆளுமை மிக்கவர். கலைஞர் - என் நண்பர். 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சியைக் காப்பாற்றினார். தமிழ் நாட்டிற்கு ஒரு தலைமை தேவை. அந்த இடத்தை நிரப்புவதற்கு நான் வருகிறேன். நீங்கள் வாழ்த்தாவிட்டால் பரவாயில்லை. ஏன் ஏளனம் செய்கிறீர்கள்? எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது என்று சொல்கிறார்கள். யாரும் அப்படி ஆக முடியாது. அவர் யுக புருஷர். ஆயிரம் ஆண்டு ஆனாலும் அவ்வாறு ஒருவர் பிறக்க முடியாது. ஆனால், அவர் கொடுத்த அந்த நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும்.