by Staff Writer 04-03-2018 | 7:35 PM
COLOMBO (News 1st) - தொடரும் கடும் வறட்சி காரணமாக ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் வறட்சி காரணமாக அநுராதபுரம் , பொலன்னறுவை, குருணாகல், புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
புத்தளம் மாவட்டமே வறட்சியினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வறட்சி காரணமாக மன்னார் - மடு பகுதியில் சுமார் 130 ஏக்கர் நெற் செய்கை அழிவடைந்துள்ளது.
நெற்பயிர்களை இறுதி வரை காப்பாற்றும் நோக்கில் விவசாயிகள் சிலர் நீர் பம்பி மூலமாக நீர் இறைத்து வருகின்றனர்.
அநுராதபுரம் மாவட்டத்திலும் வறட்சியினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கிய பல குளங்களின் நீர் மட்டமும் குறைவடைந்துள்ளன.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் கடும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்தப் பகுதிகளில் நாளை முதல் மழை வீழ்ச்சி குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றிரவு மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய, ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழையை எதிர்பார்ப்பதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
https://www.youtube.com/watch?v=cW2RShCFcAg