காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பில் அறிக்கை

காணாமற்போனோர் அலுவலகம் ஒரு சமூகத்தை திருப்திப்படுத்தும் கட்டமைப்பு அல்ல

by Staff Writer 04-03-2018 | 7:24 PM
COLOMBO (News 1st) - காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம், சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவான நீதிமன்றக் கட்டமைப்பு அல்லவென அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது. காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் குறித்து, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஒரு நிறுவனம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் ஊடாக கண்டறியப்படும் விடயங்கள் எவ்வித குற்றவியல் அல்லது சிவில் நீதிமன்ற செயற்பாட்டிற்கும் வழிவகுக்காது என சட்டத்தில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் ஒரு சமூகத்திற்கு நன்மையையும் மற்றுமொரு சமூகத்திற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஸ்தாபிக்கப்படவில்லை எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காணாமற்போனவர்கள் என அடையாளம் காணப்பட்ட குழுவினர் அல்லது யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரித்து உண்மையை கண்டறிவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனவும் அமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தகவல்களின் பிரகாரம் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் சுமார் 16,000 பேர் காணாமற்போயுள்ளதாகவும் அவர்களில் சுமார் 5100 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமற்போனவர்கள் எங்கே இருக்கின்றனர் என்பதன் உண்மையை கண்டறிந்து அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு திருப்திகரமான பதிலை வழங்க வேண்டிய பொறுப்பு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரை இலக்காகக் கொண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்குடன் இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.