நடிகைகளின் வாழ்க்கை சந்தோஷமாக இல்லை

நடிகைகளின் வாழ்க்கை சந்தோஷமாக இல்லை: தமன்னா

by Bella Dalima 03-03-2018 | 7:01 PM
நடிகைகள் என்றால் சுகங்களை அனுபவிக்கிறவர்கள் என்ற தவறான எண்ணம் பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால், நடிகைகளின் வாழ்க்கை சந்தோஷமாக இல்லை என நடிகை தமன்னா கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தமன்னா கூறியிருப்பதாவது,
நடிகைகள் என்றால் சுகங்களை அனுபவிக்கிறவர்கள் என்ற தவறான எண்ணம் பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது. நாங்களும் நெருக்கடியில் வாழ்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரிவது இல்லை. நடிகைகள் யாரும் இங்கு முழுமையான மகிழ்ச்சியில் இல்லை. இரவு பகல் பாராமல் படப்பிடிப்புகளில் கலந்துகொள்கிறோம். ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் உழைக்கிறோம். படப்பிடிப்பில் ‘ஷாட் ரெடி’ என்று அழைத்ததும் போய் நிற்க வேண்டும். மனதில் என்ன கஷ்ட நஷ்டம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் நடிக்க வேண்டும். இப்போதைய நடிகைகள் பல மொழிகளில் நடிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை சென்னை, ஐதராபாத், பெங்களூர், மும்பை என்று பயணத்திலேயே கழிகிறது. சொந்தப் பணிகளுக்காக நேரம் ஒதுக்க முடியாது. குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது. கதாநாயகிகள் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். பெயர், புகழ் இருக்கிறது என்று எளிதாக சொல்லி விடுகிறவர்களுக்கு எங்களுக்கு பின்னால் இருக்கும் இதுபோன்ற கஷ்டங்கள் தெரிவது இல்லை. நான் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் படப்பிடிப்புகளுக்காக ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே தான் இருக்கிறேன். விரும்பிய உணவுகளை என்னால் சாப்பிட முடியவில்லை. அழகுக்காக உடற்பயிற்சிகள் செய்து உடம்பை வருத்த வேண்டி உள்ளது. சாதாரணப் பெண்களை பார்க்கும்போது நம்மால் அவர்களைப்போல் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும். சினிமாவில் சந்தோஷமே இல்லை என்று சொல்லவில்லை. நாங்கள் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கிறது என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சினிமாவில் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புகளுக்காகவும் அலைய வேண்டி உள்ளது. டைரக்டர்கள் தான் இங்கு கேப்டன். அவர்கள் சொல்வதைத் தான் கேட்டு நடிக்க வேண்டும்.
என தமன்னா கூறியுள்ளார்.