இராஜாங்கனை குடிநீர் திட்டம்: இணக்கப்பாடு அவசியம்

இராஜாங்கனை உத்தேச குடிநீர் திட்டம் தொடர்பில் பொது இணக்கப்பாடு அவசியம்: நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை

by Bella Dalima 03-03-2018 | 7:30 PM
Colombo (News 1st) சர்ச்சைக்குரிய இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் உத்தேச குடிநீர் திட்டம் தொடர்பில் பொது இணக்கப்பாட்டிற்கு வருவது அவசியம் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குடிநீர் தேவை நிலவும் பிரதேசங்கள் மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்ட போதிலும், தற்போது அது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளவு குறைவடையும் காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், உத்தேச குடிநீர் திட்டத்தை 24 மணித்தியாலங்களும் அமல்படுத்தும் திட்டம் இல்லை எனவும் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பிட்ட ஒரு சில மணித்தியாலங்களுக்கு மாத்திரம் குடிநீருக்காக இந்த நீர்த்தேக்கத்தை பயன்படுத்துவதால், நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்சினையை ஓரளவு தீர்க்க முடியும் என சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தேச இராஜாங்கனை குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் அண்மையில் தம்புத்தேகம நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் 59 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் 57 பேர் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.