அலோசியஸ், கசுனின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு

அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேனவின் விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிப்பு

by Bella Dalima 02-03-2018 | 4:38 PM
Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரின் விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீதான வழக்கு விசாரணை இன்று கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சிறைச்சாலையில் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்குமாறு நீதவான் வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கின் பிரதான சந்தேகநபரான அர்ஜூன் அலோசியஸ் எதிர்வரும் 8 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை கூரியர் சேவை அல்லது விரைவுத் தபால் ஊடாக அனுப்ப முடியவில்லை என சட்ட மா அதிபருக்கு பதிலாக மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் நாயகம் ஹரிப்பிரியா ஜயசுந்தர தெரிவித்தார். அர்ஜூன் அலோசியஸ் சிங்கப்பூர் விலாசத்தில் இல்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அர்ஜூன் மகேந்திரனின் புதல்வி கடந்த 20 ஆம் திகதி சிங்கப்பூருக்கு சென்று 22 ஆம் திகதி நாடு திரும்பிய சந்தர்ப்பத்தில், அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்ததாக மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், தமது தந்தை சிங்கப்பூரில் வசித்த இல்லம் மூடியுள்ளதால், தந்தை மற்றும் தாயாரை சந்திக்கவில்லை என அர்ஜூன் மகேந்திரனின் புதல்வி வாக்குமூலமளித்ததாக பிரதி சொலிசிட்டர் நாயகம் இன்று மன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.