சிலர் ஐ.தே.க-வை அழிவிற்கு இட்டுச்செல்கின்றனர்: ரவி

வாக்கு வங்கியில்லாத சிலர் ஐக்கிய தேசியக் கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்கின்றனர்: ரவி கருணாநாயக்க

by Bella Dalima 01-03-2018 | 8:46 PM
Colombo (News 1st) வாக்கு வங்கியில்லாத சிலர் ஐக்கிய தேசியக் கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்வதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவமொன்றின் பின்னரே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமது வீட்டிலுள்ளவர்களை நீக்கி விட்டு அயல் வீட்டிலுள்ளவர்களை இணைத்துக்கொண்டுள்ளனர். கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும். அனுபவமுள்ளவர்களை ஒருபுறம் தள்ளிவிட்டு செயற்படுகின்றனர். எமது பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாரிய சேவையாற்றியுள்ளனர். எனினும், அவர்களை இன்று முடக்கி வைத்துள்ளனர். தேசியப் பட்டியலில் வந்த சிலரே இன்று தீர்மானம் எடுக்கின்றனர். எனது விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள மாரப்பனை குழுவிற்கு எவ்வித வாக்கு வங்கியும் இல்லாத நபர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். கண்ணாடி அணிந்து பேராசிரியர்கள் போல் இருந்தால் வாக்குகளைப் பெற முடியும் என அவர்கள் நினைக்கின்றனர். அவர்களே இந்தக் கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.