கேப்பாப்பிலவு காணி விடுவிப்புப் போராட்டம்

கேப்பாப்பிலவு காணி விடுவிப்புப் போராட்டத்திற்கு ஒரு வருடம் பூர்த்தி

by Bella Dalima 01-03-2018 | 8:08 PM
கேப்பாப்பிலவு நில விடுவிப்புப் போராட்டத்தின் ஒரு வருட நிறைவினை முன்னிட்டு இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கேப்பாப்பிலவு இராணுவ முகாமிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமிருந்த காணிகள் கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினர் வசமிருந்த சுமார் 424 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது. கேப்பாப்பிலவில் மூன்று கட்டங்களாக முறையே 42, 242, 133 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 55 ஏக்கர் காணி இன்னும் விடுவிக்கப்படாதிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது. இதேவேளை, முல்லைத்தீவு - பிலக்குடியிருப்பில் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த 7 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேப்பாப்பிலவில் காணி விடுவிக்கப்பட்டு மீள்குடியேறிய மக்களின் நிலைமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் இன்று ஆராய்ந்தது. சில பகுதிகளில் மக்கள் மீள்குடியேறியுள்ளதுடன், சில பகுதிகளில் மக்கள் நிரந்தர வீடுகளுக்காகக் காத்திருக்கின்றனர். வட மாகாணத்தில் பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளில் 2018 ஆம் ஆண்டில், 28.45 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்