முக்கிய முடிவு எடுக்கப் போகிறேன்: டி.ராஜேந்தர்

தமிழக மக்களைக் காப்பாற்ற முக்கிய முடிவு எடுக்கப் போகிறேன்: டி.ராஜேந்தர்

by Bella Dalima 27-02-2018 | 4:02 PM
தமிழக மக்களைக் காப்பாற்ற நாளை (28) முக்கிய முடிவொன்றை அறிவிக்கவுள்ளதாக இலட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளார். இலட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் திருச்சி விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழகத்தில் 42 வருடங்களுக்கும் மேலாக அரசியல் செய்து வருகிறேன். தி.மு.க.வில் கொள்கை பரப்பு செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறேன். நான் இதுவரை முதல்வர் பதவிக்கோ, அமைச்சர் பதவிக்கோ ஆசைப்பட்டதில்லை. நான் தொடங்கிய இலட்சிய தி.மு.க. 15 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது. தமிழக மக்களைக் காப்பாற்றுவதற்காக முக்கிய முடிவு எடுக்கப்போகிறேன் என்று தெரிவித்திருந்தேன். இதையடுத்து, நான் செல்லும் இடங்களில் எல்லாம் என்ன முடிவு என்று மக்கள் என்னைப் பார்த்து ஆர்வமுடன் கேட்கிறார்கள். மக்கள் என் மீது வைத்துள்ள பாசத்தால் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய முடிவு பற்றி நாளை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவிக்க உள்ளேன். மாற்றம் கொண்டு வருகிறோமோ இல்லையோ எனது முடிவில் மாற்றம் இருக்காது. தமிழக மக்களின் சக்தியை திசை திருப்பக்கூடிய யுக்தி என்னிடம் உள்ளது. என்னையும், எனது மகனையும் வாழவைத்த தமிழக மக்களுக்கு என்றும் விசுவாசமாக இருப்போம். கடவுள் முருகன் மாதிரி பேசக்கூடிய அறிவு படைத்தவர் நடிகர் சிம்பு. இன்று கட்சி ஆரம்பிக்கிறவர்கள் 3 நாட்களில் முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். போராடினால் தான் அரசியலில் வெற்றி பெற முடியும். நானும் ஒரு ஆன்மீகவாதி தான். ஆனால் யாருக்கு ஜாதகம் நன்றாக இருக்கிறதோ அவர்கள் ஜெயிப்பார்கள். திருச்சி ஒரு முக்கியமான இடம். இங்கு எடுக்கும் முடிவுகள் அரசியலில் எதிரொலிக்கும்.
என குறிப்பிட்டுள்ளார்.