நடிகை ஸ்ரீதேவி காலமானார்

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார்

by Staff Writer 25-02-2018 | 9:55 AM
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார். 54 வயதான ஸ்ரீதேவி உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக குடும்பத்துடன் டுபாய் சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று (24) இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். திருமண நிகழ்வு முடிந்து மற்றய குடும்ப அங்கத்தவர்கள் இந்தியா திரும்பிய நிலையில் ஸ்ரீதேவியும் போனி கபூரும் அங்கேயே தங்கியுள்ளனர். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 1969 இல் துணைவன் என்ற படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான ஸ்ரீதேவி 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய நடிகர்களான கமல் மற்றும் ரஜினியுடன் கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு பாரதிராஜாவின் 16 வயதினிலே திரைப்படத்தில் ‘மயில்’ என்ற கதாபாத்திரத்தில்  நடித்து தனது திறமையை அவர் வெளிப்படுத்தினார். தமிழ் திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ஸ்ரீதேவி மூன்றாம் பிறை திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றது. பொலிவூட்டில் 1978 ஆம் ஆண்டு சொல்வா சவன் இவரது அறிமுகப் படமாகும். ஆனால் இதற்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிதேந்திராவின் ஹிம்மத்வாலா மூலம் வணிக ரீதியான வெற்றி இவருக்குக் கிடைத்தது. இவர் தனது அபாரமான பன்முக நடிப்புத் திறனால் இந்தித் திரையுலகிலும் பெரிய அளவில் வலம் வந்தார். கமல், ரஜினி, சிவாஜி உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த ஸ்ரீதேவி, எம்.ஜி.ஆர் உடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2012 இல் ''இங்கிலிஷ் விங்கிலிஷ்'' மூலம் மீண்டும் தனது திறமையை நிரூபித்த ஶ்ரீதேவி கடைசியாக ''மாம்'' என்ற திரைப்படத்திலும் கலக்கினார். இந்நிலையில் இவரது மறைவு திரையுலகை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நன்றி - தி இந்து