அரசாங்க ஊழியர்களுக்கான வாகன இறக்குமதி

அரசாங்க ஊழியர்களுக்கான வாகன இறக்குமதி: என்ஜின் கொள்ளளவின் அடிப்படையில் வரி அறவிடத் திட்டம்

by Bella Dalima 23-02-2018 | 6:29 PM
Colombo (Newsfirst) அரசாங்க ஊழியர்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பிலான விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2018 வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம், என்ஜின் கொள்ளளவின் அடிப்படையில் வரி அறவிடத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அரசாங்க ஊழியர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது இதற்கு முன்னர் ​​வாகனத்தின் பெறுமதி மீது வரி விதிக்கப்பட்டிருந்தது. எனினும், புதிய வரி விதிமுறைகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையை அமைச்சின் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். புதிய சுற்றறிக்கையின் பிரகாரம், 25 வருட சேவையைப் பூர்த்தி செய்துள்ள அரசாங்க ஊழியர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. அமைச்சின் செயலாளர்கள், மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட உயர் மட்ட அரச அதிகாரிகளுக்கு 22 மில்லியன் ரூபா வரை வரி சலுகை வழங்கப்படவுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்தார். அமைச்சின் மேலதிக செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் ஆகிய இரண்டாம் நிலை அதிகாரிகளுக்கு 16 மில்லியன் வரி சலுகை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். ஏனைய தரப்பு ஊழியர்களுக்கு 12 மில்லியன் ரூபா வரி சலுகை வழங்கப்படவுள்ளதாக ஜே.ஜே. ரத்தினசிறி கூறினார். புதிய திருத்தங்களுடன் கூடிய வரி விதிமுறைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.