தேயிலையில் கலப்படம்: அதிகாரிகள் ஆராய்வு

தேயிலை தொழிற்சாலைகளில் இடம்பெறும் கலப்படம் தொடர்பில் ஆராய்வு

by Staff Writer 22-02-2018 | 7:00 AM
COLOMBO (Newsfirst) - தேயிலைத் தூளுடன் சீனியை கலந்து விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து 82 தேயிலைத் தொழிற்சாலைகளின் மாதிரிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. தமது அதிகாரிகள் குழு ஒன்று தேயிலை மாதிரியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் தொழிற்சாலைகளுக்கு அறிவிக்காமல் நேற்று முன்தினம் சென்று தேயிலை மாதிரியை பெற்று வந்ததாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெதியாகொட தெரிவித்தார். குறித்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதன் பின்னர் தேயிலைத்தூளுடன் சீனி கலந்த சம்பவம் பதிவாகியிருந்தால் குறித்த தொழிற்சாலைகளை தடை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை தேயிலை சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். தேயிலைத்தூளுடன் சீனியைக் கலந்து விற்பனை செய்த இரண்டு தேயிலைத் தொழிற்சாலைகள் அண்மையில் இரத்தினபுரி நகரில் தடை செய்யப்பட்டதாகவும் இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெதியாகொட மேலும் தெரிவித்தார்.