கஹகொல்லயில் பஸ்ஸில் தீ: விசாரணைகள் தொடர்கின்றன

கஹகொல்லயில் பஸ்ஸில் தீ: விசாரணைகள் தொடர்கிறது

by Staff Writer 22-02-2018 | 6:52 AM
COLOMBO (Newsfirst) - தியதலாவ - கஹகொல்ல பிரதேசத்தில் பஸ்ஸொன்றிற்குள் தீ பரவியமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். கைக்குண்டொன்று வெடித்தமையே, தியதலாவ - கஹகொல்ல பிரதேசத்தில் பஸ்ஸொன்றிற்குள் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தீ காரணமாக பஸ் முற்றாக எரிந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரச இரசாயனப் பகுப்பாய்வாளரால் பஸ் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இது பயங்கரவாதத் தாக்குதல் இல்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்த பஸ்ஸில் பயணித்த 19 பேர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் இராணுவத்தினர் 7 பேரும் விமானப்படையினர் 5 பேரும் பொதுமக்கள் 7 பேரும் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இரண்டு இராணுவத்தினரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இராணுவப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.