சுமந்திரனின் அறிவிப்பு பிரதமருடனான கூட்டு சதி?

அறிக்கைகள் தமிழில் இல்லை: சுமந்திரனின் அறிவிப்பு பிரதமருடனான கூட்டு சதி என வாசுதேவ குற்றச்சாட்டு

by Bella Dalima 21-02-2018 | 4:59 PM
Colombo (Newsfirst) ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தமிழ் மொழியில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்தமை பிரதமருடனான கூட்டு சதி என பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. நிலையியற்கட்டளையின் பிரகாரம், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தமிழ் மொழியிலும் இருக்க வேண்டும் என்ற கருத்திற்கு நேற்றைய தினம் தாம் இணங்கிய போதும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அது தொடர்பில் தெரிவித்த கருத்தை பின்னர் ஆராய்ந்து பார்த்து இந்த முடிவிற்கு வந்ததாக வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார். அதற்கமைய, குறித்த அறிக்கைகள் தொடர்பில் கடந்த 6 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட விவாதத்தின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு மொழிப்பிரச்சினை குறித்து எவ்வித அறிவிப்புகளையும் முன்வைத்திருக்கவில்லை என அவர் கூறினார். எனினும், தற்போது பிரதமர் நெருக்கடிக்குள்ளாகியுள்ள சந்தர்ப்பத்தில், அவரைப் பாதுகாப்பதற்காக அறிக்கைகள் தமிழ் மொழியில் இல்லை என கூட்டுசதி நடத்தி, கருத்து தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றஞ்சாட்டினார்.