வெற்றி தொடர்பில் தினேஷ் சந்திமால் கருத்து

இந்த வெற்றி எங்களுக்கு வலுவானதொரு சக்தியை தந்துள்ளது - தினேஷ் சந்திமால்

by Staff Writer 19-02-2018 | 4:28 PM
COLOMBO (Newsfirst) - அர்ப்பணிப்பு மற்றும் மிகச்சிறந்த பயிற்சிகளின் மூலமே பங்களாதேஷுக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரை கைப்பற்ற முடிந்ததாக இலங்கை அணித்தலைவரான தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் 02 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரை 02 க்கு பூச்சியம் என இலங்கை அணி கைப்பற்றியது. சிலட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்களைப் பெற்றது. அதிரடியாக விளையாடிய குசல் மென்டிஸ் 42 பந்துகளில் 70 ஓட்டங்களை விளாசினார். 211 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமால் தெரிவித்த கருத்து... ''இந்த வெற்றி எங்களுக்கு வலுவானதொரு சக்தியை தந்துள்ளது. எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளில் பிரகாசிப்பதற்கானதொரு உத்வேகத்தை தந்துள்ளது. அர்ப்பணிப்பு மற்றும் மிகச்சிறந்த பயிற்சியே இவையனைத்திற்கும் காரணமாக அமைந்தது. அனைத்து வீரர்களும் சிறந்த பயிற்சிகளை பெற்றோம். உண்மையில் பங்களாதேஷின் மைதானங்களில் விளையாடிய விதம் தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்''