தலங்கமையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரழப்பு

தலங்கமையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரழப்பு

by Staff Writer 18-02-2018 | 3:21 PM
தலங்கம விமலதிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த ஆண் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த 51 வயதான ஆணும், 48 வயதான பெண்ணும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த ஆண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பகுதியில் இரண்டு துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை கொழும்பு வாழைத்தோட்டம் புதுக்கடை நீதிமன்ற கட்டடத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 2 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிரான்ட்பாஸ் பகுதியிலுள்ள காணியொன்றிலிருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இரண்டு துப்பாக்கிகளையும் புதுக்கடை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நீதிமன்ற கட்டடத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய நபரும், துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியவருமே இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.