விராட் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி

விராட் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி

by Bella Dalima 17-02-2018 | 4:03 PM
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 6 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோஹ்லியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் அழைப்பிற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி, 46.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சொண்டோ அதிகபட்ச ஓட்டங்களாக 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்களையும் பும்ரா மற்றும் சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியில் ஹாசிம் அம்லாவை ஆட்டமிழப்பு செய்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 பிடியெடுப்புகளைக் கைப்பற்றி மகேந்திர சிங் தோனி புதிய சாதனையையும் நிலைநாட்டினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிதானமாக ஓட்டங்களைக் குவித்தது. ஷிகர் தவான் 18 ஓட்டங்களுடனும் ரோஹித் ஷர்மா 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, அணித்தலைவர் விராட் கோஹ்லி 96 பந்துகளில் 129 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது 35 ஆவது சதமாகும் என்பதுடன், இந்த ஒருநாள் தொடரில் இது அவரது மூன்றாவது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணி 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களைக் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என இந்திய அணி கைப்பற்றியது.