by Bella Dalima 17-02-2018 | 5:05 PM
Colombo (Newsfirst)
ஜனாதிபதி தற்போதைய அமைச்சரவையை முற்றாகக் கலைத்தால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் பிரதமர் பதவியில் நீடிக்க முடியாதென ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய பிரதமரை அந்த பதவியிலிருந்து நீக்குவது தொடர்பிலான வழிவகைகள் குறித்து நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சரவையை முற்றாகக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தகைய சந்தர்ப்பங்களில், அந்த அமைச்சரவைக்கு தலைமை தாங்கும் பிரதமர், பதவியில் நீடிக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை முற்றாகக் கலைக்கப்படும் சந்தர்ப்பங்களில், பிரதமரின் அதிகாரம் முற்றிலும் இல்லாமற்போகும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
அவ்வாறு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில், அரசியலமைப்பின் 42/4 ஆம் சரத்தின் பிரகாரம், புதிய பிரதமரை ஜனாதிபதியால் நியமிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 42/4 ஆம் சரத்தின் பிரகாரம், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ஒருவரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறினார்.
அத்துடன், அரசியலமைப்பின் 43/2 ஆம் சரத்தின் பிரகாரம், பிரதமரின் ஆலோசனையைப் பெற்று, ஜனாதிபதி அமைச்சரவையை நியமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவையை நியமிக்கும் போது ஜனாதிபதி, பிரதமரின் ஆலோசனையைப் பெற வேண்டியிருந்தாலும், அமைச்சரவையை மாற்றியமைக்கும் போது, பிரதமரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளத் தேவையில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 44/3 ஆம் சரத்தின் பிரகாரம், ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றியமைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் 46/1 ஆம் சரத்தின் பிரகாரம், அமைச்சரவை நீடிக்கும் வரை பிரதமர் அந்த பதவியைத் தொடர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும், பிரதமர் தலைமையில் இயங்கும் அமைச்சரவையை ஜனாதிபதி முற்றாக மாற்றியமைக்கும் பட்சத்தில், பிரதமர் அந்த பதவியில் நீடிக்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய கூறினார்.