குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முதல் திருநங்கை

உலகிலேயே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முதல் திருநங்கை

by Bella Dalima 16-02-2018 | 5:04 PM
அமெரிக்காவில் அறுவை சிகிச்சைகள் எதுவும் செய்துகொள்ளாமல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து திருநங்கை ஒருவர் சாதனை புரிந்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றார். ஆனால், அக்குழந்தைக்கு வாடகைத் தாய் தாய்ப்பால் கொடுக்க மறுத்து விட்டார். எனவே, திருநங்கை தானே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வருகிறார். திருநங்கை ஒருவர் குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்க முடியும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. மருத்துவர்களின் தீவிர முயற்சிக்குப் பின்னர் இது சாத்தியமாகியுள்ளது. ஆனாலும், குறித்த திருநங்கைக்கு அறுவை சிகிச்சைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. மவுன்ட் சினாய் பார் டிரான்ஸ்ஜென்டர் எனும் மருத்துவமனையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஹார்மோனை மாற்றியமைக்கும் மருத்துவ முறைகள் மூலம் திருநங்கைக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. கனடாவில் இருந்தபடியே மருத்துவர்கள் அவருக்கு இந்த சிகிச்சையை வழங்கியுள்ளனர். குழந்தை பிறப்பதற்கு 5 மாதங்களுக்கு முன்பே இம்மருத்துவ முறை மூலம் பால் சுரக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்போது இவர் ஒரு நாளுக்கு 8 அவுன்ஸ் தாய்ப்பால் குழந்தைக்கு புகட்டி வருகிறார். இதன் மூலம் இவர் இன்னும் 6 மாதத்திற்கு பால் கொடுக்க முடியும். அதன் பின் சரியான உணவு முறைகள் மூலம் மேலும் கொடுக்க வழிவகை செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். திருநங்கையின் பெயர் வௌியிடப்படவில்லை. அவருக்கு 35 வயதாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் உலகிலேயே தாய்ப்பால் கொடுக்கும் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.